புதிய எழுத்துப் பொறிப்புக் கண்டுபிடிப்பு
வீரபாண்டி சித்தர் குகை எழுத்து .
ககன்ய காய
கமன சித்தர் தக்கன்
அவ்வப்போது நண்பர்கள் புதிதாகக் கண்டுபிடித்த , படித்தறிய இயலாதத் தொல்லெழுத்துப் பொறிப்புகளை எனக்கனுப்பி படிக்கக் கேட்பார்கள் . அவ்வாறுதான் அண்மையில் 109 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட பாபனாசம் சன்யாசிப்புடவு கல்வெட்டு என்னால் படிக்கப்பட்டது . இப்போது விழுப்பரம் மாவட்டம் திருக்கோவிலூரிலிருந்து 9 கிமீ தொலைவிலுள்ள வீரபாண்டி என்னும் சிற்றூரிலிருந்து ஒரு அரிய கல்லெழுத்துப் பாறைத் தீட்டல் வந்துள்ளது . நண்பர் ஒரிசா பாலு அவர்களது நண்பர்கள் இதனைக் கண்டுபிடித்துள்ளனர் . ஆசிரியர் சிலம்பரசன் என்னும் உள்ளூர்க்காரர் கண்டுபிடித்து விழுப்புரம் செங்குட்டுவன் வாயிலாக வந்துள்ளது . இதுகுறித்து சிற்றிங்கூர் ராஜா என்பவரது முகநூல்பதிவில் நான் முன்பு படித்துள்ளேன் . வீரபாண்டி ஏரிப் பகுதியில் உள்ள ஒரு பாறைக் குன்றின் இயற்கைக் குகைத்தளத்தில் வெள்ளை வண்ணத்தால் எழுதப்பட்டுள்ளது . அதுகுறித்தப் படங்களையும் இணைத்துள்ளேன் . முதல் பார்வையிலேயே இவை அழகுணர்வால் தீட்டப்படாமல் ஒரு நோக்கத்துடன் தீட்டப்பட்டிருப்பதை என் 50 ஆண்டுகாலப் பட்டறிவால் உணர முடிந்தது . வடிவங்களைப் பாறைகளில் கவனத்துடன் வரைந்துள்ளனர் . எனது 25 ஆம் வயதில் சிந்து எழுத்து வடிவங்களின் மீது கொண்ட ஆர்வம் , பின்னர் தமிழி எழுத்தின் மீதான விருப்பமாக வளர்ந்தது . அந்தப் பட்டறிவு தந்த உள்ளுணர்வே என்னை இன்றுவரை வழிநடத்திச் செல்கிறது . தற்போது வீரபாண்டி எழுத்துகளைப் படிக்கவும் உதவியுள்ளது என்றே நம்புகிறேன்
எனது ஆய்வுக் கருத்துகள் ஒவ்வொரு நாளும் உறுதிப்பட்டு வருவதும் , தமிழக எழுத்துச் சான்றுகள் மேலும் மேலும் தொன்மைக் காலத்தை நோக்கி நகர்ந்து சிந்து வெளி நாகரிகத்திற்கும் தமிழகத்திற்குமான இடைவெளி சுருங்கி வருவதும் இந்நாளில் மகிழ்ச்சியூட்டுகிறது . சிந்து நாகரிக எழுத்துகள் படிப்படியாக மாறி தமிழியாகும் மாற்றத்துக்கான சான்றுகள் குஜராத் பேட் துவாரகை எழுத்தில் தேடியது போக இப்போது தமிழகத்திலேயே கிடைத்து வருவதைக் காண்கிறேன் . அத்தகைய மாற்றத்தின் இறுதி நிலைகளைச் சன்யாசிப்புடவு வடிவங்களில் கண்டதுபோல , மாற்றத்தின் தொடக்கநிலை வடிவங்களை நான் திருக்கோயிலூர் அருகே உள்ள வீரபாண்டியில் காண்கிறேன் . சிந்துக்கும் நமக்குமான இடைவெளியைப் பானையோட்டு எழுத்து வடிவங்களுக்குப் பதிலாக சிந்து எழுத்துப் பொறிப்புகளே நிறைவு செய்யும் நிலையை அடைவது உறுதி என்றும் உணர்கிறேன் .
சிந்து நாகரிக அழிவிற்குப் பின்னரான அதன் எழுத்துத் தொடர்ச்சி சிந்து வெளியை ஒட்டிய எங்கும் கிடைக்காமல் அவை பானையோட்டு எழுத்துகள் , தமிழகச் சிந்து எழுத்து வடிவங்களாகத் தமிழகத்தில் மட்டுமே கிடைக்கின்றன . இந்த வரலாற்றுச் சான்றுகளுக்குப் பின்னால் ஒரு வரலாற்று அடிப்படை இருப்பதால் சிந்துவெளி நாகரிகத்தின் தொடர்ச்சியான இந்திய வரலாற்றினைத் தமிழகத்திலேயே தேட வேண்டும் என்ற உண்மை நிறுவனமாகிறது . மேலும் , வீரபாண்டி பாறைத்தீட்டலுடன் தொடர்புள்ள இன்னொரு கருத்து அது விழுப்புரம் மாவட்டம் கீழ்வாலை எழுத்து வடிவங்களுக்கு மிக அண்மையில் கிடைப்பதுமாகும் . வியப்பளிக்கும் இன்னொரு செய்தி நான் இதயத் தாக்குதலுக்கு ஆளாவதற்குச் சில மாதங்கள் முன்னரே கீழ்வாலையைப்பற்றி ஒரு சிறு புத்தகம் எழுதுவதாகத் திட்டமிட்டிருந்தேன் . அது இயலாமல் போனதால் முகநூலில் ஒரு விரிவான பதிவினைச் செய்வதற்கு நினைத்திருந்த போதுதான் நண்பர் ஒரிசா பாலு எனக்கு இப்பாறைப் பொறிப்பைப்பற்றியக் கோரிக்கை வைத்தார் . அதனை ஏற்று நான் மேற்கொண்ட ஆய்வே இப்போது நான் உங்கள் முன் படைப்பது .
வீரபாண்டி எழுத்து வடிவங்கள் நான்கு தொகுதிகளாகத் தீட்டப்பட்டுள்ளன . அருகருகே உள்ள இவை ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையேயாகும் . அவற்றை திரு . சிலம்பரசன் வரிசைப் படுத்தியிருக்கும் முறையும் பாராட்டத் தக்கதேயாகும் . முதல் தொகுதி நான்கு வடிவங்களையும் , இரண்டாம் தொகுதி இரு சொற்களாக ஐந்துவடிவங்களையும் , மூன்றாவது தொகுதி நான்கு வடிவங்களையும் , நான்காவது தொகுதி மூன்று வடிவங்களையும் கொண்டுள்ளன . வடிவங்கள் காட்டும் பொருள்நிலை சொல்நிலைக்கேற்ப பகுதிகளாக அவை அமைந்துள்ளன . முதலில் அவ்வடிவத் தொகுதிகளின் பொருள்நிலைக்கேற்ப அமைக்கிறேன் :
1) கே ய க க
2) க கன் ய கா ய
3) க க க ய
1 2 3 3க ய - முகய
4) த க் க்
இவ்வடிவங்களின் அடிப்படையில் அவர்கள் சொல்லக் கருதிய கருத்து
1) = கேய ககன்
2) = ககன்ய காய
3) = முகய
4) = தக்கன்
இவற்றுள் ( அ ) (1) கக என்பதன் இரண்டாவது வடிவம் , (3) முகய என்பதன் மூன்றாவது வடிவம் , (4) தக்க என்பதன் இரண்டு மற்றும் மூன்றாவது வடிவங்கள் ஆகியவை வடிவமைப்பால் மனிதக் கருத்துணர்த்தி உயர்திணை ஆண்பால் உணர்த்தி வந்தன . ( ஆ ) 2 ஆம் தொகுதியின் இடமிருந்து இரண்டாவது வடிவம் மனித வடிவ க மற்றும் Y வடிவ ன் எழுத்து இணைந்து கூட்டுவடிவமாகி கன் என்ற அசை உணர்த்தி மனிதன் உட்கார்ந்திருப்பது போல மடிந்த நிலையில் உள்ளது . இத்தகைய தவ என்ற வடிவம் பொதிகை குகை எழுத்தில் மடிந்த நிலையில் வருகிறது . துறவிகள் இவ்வாறு எழுதுவதில் ஏதேனும் மறைபொருள் இருக்கலாம் . ( இ ) 3 ஆம் தொகுதியில் 3 க வடிவங்கள் வந்து - க க க = முக என்றும் ( மு / மூ = மூன்று ) அதனுடன் ய என்ற எழுத்து சேர - முகய என ஆனது . முகய் = குகை . சிந்துவில் நான்கு ய ய ய ய எழுதி = நாய ( 2950 - மகாதேவன் ) = தலைவன் என்று எழுதுவர் . அவ்வாறே மூய என்றும் எழுதினர் . (ஈ ) சிந்துவில் × என்பது த வடிவம் . இங்கு , பாறை எழுத்தில் சற்று மாறி வந்தது .
பொருள்நிலையில் கேயம் = இசை , ககம் = வானம் . ககன் = வானவன் . ககனம் = வானம் . காயம் = உடல் . ககன்ய = ககனத்திற்குரிய - வானில் செல்லும் . வானசாரி = ககன சஞ்சாரி - சித்தர்கள் .
தங்கள் பூத உடலுடன் வானத்தில் சஞ்சரிக்கும் சித்தர்கள் = ககன ( கமன ) சித்தர்கள் . குற்றாலக் குறவஞ்சி சித்தர்கள் வான்வழியே குற்றால நாதரைத் தொழ வருவதை ' கமன சித்தர் வந்து வந்து காய சித்தி விளைப்பர் ' என்று பாடுகிறது . தமது பருவுடலுடன் வானத்தில் சித்தர்கள் சஞ்சரிப்பது காய சித்தி எனப்படும் . இப்பாறை முகையில் ( குகையில் ) தங்கி இருந்தோர் ககன சாரிகள் எனப்படும் ககன சித்தர்கள் என்று மக்கள் நம்பியதை இவ்வெழுத்துகள் உணர்த்துகின்றன . இதன் பொருள் குறித்து நான் இதற்கு மேலே பேச விரும்பவில்லை . ஒரு வரலாற்று ஆய்வாளனது பணி அவன் கண்டு கூறும் பொருள் விளக்கப் பொருத்தம் ஒரு நிகழ்வில் எத்தகைய பங்காற்றுகிறது என்பதுடன் முடிகிறது . மேலாய்வு மொழியாய்வாளர்களுடையதேயாகும் .
இம்முகையில் வாழ்ந்தவன் இசை வானவன் ( கந்தர்வன் ) என்று கருதத் தக்கவன் , அவன் ககனசாரி என்னும் கமன சித்தனாவான் , அவன் இக்குகைக்குரியவன் , அவன் பெயர் தக்கன் என்பதாகும் . இத்துறவிகள் அறிவர் வழிச் சித்தர்களாவர் . இப்பகுதிக்கு அண்மையிலுள்ள திரு அருண மலை எனப்படும் திருவண்ணாமலை சித்தர்கள் உறையுமிடம் என்று இன்றும் பெயர் பெற்றுள்ளது . இந்த வீரபாண்டியைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில் கீழ்வாலை , சாணூர் , பெருமுக்கல் ஆகிய இடங்களில் தெளிவான சிந்து எழுத்து வடிவங்கள் கிடைத்துள்ளன . கீழ்வாலை - வீரபாண்டி - பெருமுக்கல் என்ற காலநிலைப்படி வரிசைப்படுத்தலாம் . பெருமுக்கல் கிமு 700 என்றால் வீரபாண்டி எழுத்துகள் இன்னும் தொன்மையினவாய் கிமு 1000 என்ற கால அளவுக்குக் குறையாதத் தொல்லெழுத்துகளாகலாம்
நன்றியுடன்
படித்து கூறிய ஐயா நாகை.பா.ஜீவா அவருடைய பதிவு
https://m.facebook.com/story.php?story_fbid=182083542871794&id=100032104492713
ஒரிசா பாலு ஐயா கடல் சார் ஆராய்ச்சியாளர்
செங்குட்டுவன் ஊடகவியலாளர்
திருக்கோவிலூர் நல்லதம்பி
திருக்கோவிலூர் நல்லதம்பி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக