Translate

சனி, 18 ஜனவரி, 2020

சித்தர் மரபுக் குறியீட்டுப் பாறைத் தீட்டல் .

புதிய எழுத்துப் பொறிப்புக் கண்டுபிடிப்பு 









    வீரபாண்டி சித்தர் குகை எழுத்து .           

                  ககன்ய  காய

           கமன சித்தர் தக்கன் 

    அவ்வப்போது நண்பர்கள் புதிதாகக் கண்டுபிடித்த , படித்தறிய இயலாதத் தொல்லெழுத்துப் பொறிப்புகளை எனக்கனுப்பி படிக்கக் கேட்பார்கள் . அவ்வாறுதான் அண்மையில்  109 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட  பாபனாசம் சன்யாசிப்புடவு  கல்வெட்டு என்னால் படிக்கப்பட்டது . இப்போது விழுப்பரம் மாவட்டம் திருக்கோவிலூரிலிருந்து  9 கிமீ தொலைவிலுள்ள வீரபாண்டி என்னும் சிற்றூரிலிருந்து ஒரு அரிய கல்லெழுத்துப் பாறைத் தீட்டல் வந்துள்ளது . நண்பர் ஒரிசா பாலு அவர்களது நண்பர்கள் இதனைக் கண்டுபிடித்துள்ளனர் . ஆசிரியர் சிலம்பரசன் என்னும் உள்ளூர்க்காரர் கண்டுபிடித்து விழுப்புரம் செங்குட்டுவன் வாயிலாக வந்துள்ளது . இதுகுறித்து சிற்றிங்கூர் ராஜா என்பவரது முகநூல்பதிவில் நான் முன்பு     படித்துள்ளேன் . வீரபாண்டி ஏரிப் பகுதியில் உள்ள ஒரு பாறைக் குன்றின் இயற்கைக் குகைத்தளத்தில் வெள்ளை வண்ணத்தால் எழுதப்பட்டுள்ளது . அதுகுறித்தப் படங்களையும் இணைத்துள்ளேன் . முதல் பார்வையிலேயே இவை அழகுணர்வால் தீட்டப்படாமல் ஒரு நோக்கத்துடன் தீட்டப்பட்டிருப்பதை என் 50 ஆண்டுகாலப் பட்டறிவால் உணர முடிந்தது . வடிவங்களைப் பாறைகளில் கவனத்துடன்  வரைந்துள்ளனர் . எனது 25 ஆம் வயதில் சிந்து எழுத்து வடிவங்களின் மீது கொண்ட ஆர்வம் , பின்னர் தமிழி  எழுத்தின் மீதான விருப்பமாக வளர்ந்தது . அந்தப் பட்டறிவு தந்த உள்ளுணர்வே என்னை இன்றுவரை வழிநடத்திச் செல்கிறது . தற்போது வீரபாண்டி எழுத்துகளைப் படிக்கவும் உதவியுள்ளது என்றே நம்புகிறேன்
    எனது ஆய்வுக் கருத்துகள் ஒவ்வொரு நாளும் உறுதிப்பட்டு வருவதும் , தமிழக எழுத்துச் சான்றுகள் மேலும் மேலும் தொன்மைக் காலத்தை நோக்கி நகர்ந்து சிந்து வெளி நாகரிகத்திற்கும் தமிழகத்திற்குமான இடைவெளி சுருங்கி வருவதும் இந்நாளில் மகிழ்ச்சியூட்டுகிறது .  சிந்து நாகரிக எழுத்துகள் படிப்படியாக மாறி தமிழியாகும் மாற்றத்துக்கான சான்றுகள்  குஜராத் பேட் துவாரகை எழுத்தில் தேடியது போக  இப்போது தமிழகத்திலேயே கிடைத்து வருவதைக் காண்கிறேன் . அத்தகைய மாற்றத்தின் இறுதி நிலைகளைச் சன்யாசிப்புடவு வடிவங்களில் கண்டதுபோல  ,  மாற்றத்தின் தொடக்கநிலை வடிவங்களை நான் திருக்கோயிலூர் அருகே உள்ள வீரபாண்டியில் காண்கிறேன் . சிந்துக்கும் நமக்குமான இடைவெளியைப் பானையோட்டு எழுத்து வடிவங்களுக்குப் பதிலாக சிந்து எழுத்துப் பொறிப்புகளே நிறைவு செய்யும் நிலையை அடைவது உறுதி என்றும் உணர்கிறேன் .
     சிந்து நாகரிக அழிவிற்குப் பின்னரான அதன் எழுத்துத் தொடர்ச்சி சிந்து வெளியை ஒட்டிய எங்கும் கிடைக்காமல் அவை பானையோட்டு எழுத்துகள் ,  தமிழகச் சிந்து எழுத்து வடிவங்களாகத் தமிழகத்தில் மட்டுமே கிடைக்கின்றன . இந்த  வரலாற்றுச் சான்றுகளுக்குப் பின்னால் ஒரு வரலாற்று அடிப்படை இருப்பதால்  சிந்துவெளி நாகரிகத்தின் தொடர்ச்சியான இந்திய வரலாற்றினைத் தமிழகத்திலேயே தேட வேண்டும் என்ற உண்மை நிறுவனமாகிறது . மேலும் , வீரபாண்டி பாறைத்தீட்டலுடன் தொடர்புள்ள இன்னொரு கருத்து அது விழுப்புரம் மாவட்டம் கீழ்வாலை எழுத்து வடிவங்களுக்கு மிக அண்மையில் கிடைப்பதுமாகும் . வியப்பளிக்கும் இன்னொரு செய்தி நான் இதயத் தாக்குதலுக்கு ஆளாவதற்குச் சில மாதங்கள் முன்னரே  கீழ்வாலையைப்பற்றி ஒரு சிறு புத்தகம் எழுதுவதாகத் திட்டமிட்டிருந்தேன் . அது இயலாமல் போனதால் முகநூலில் ஒரு விரிவான பதிவினைச் செய்வதற்கு நினைத்திருந்த போதுதான் நண்பர் ஒரிசா பாலு எனக்கு இப்பாறைப் பொறிப்பைப்பற்றியக்   கோரிக்கை வைத்தார் . அதனை ஏற்று நான் மேற்கொண்ட ஆய்வே இப்போது நான் உங்கள் முன் படைப்பது .
     வீரபாண்டி எழுத்து வடிவங்கள் நான்கு தொகுதிகளாகத் தீட்டப்பட்டுள்ளன . அருகருகே உள்ள இவை ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையேயாகும் . அவற்றை திரு . சிலம்பரசன் வரிசைப் படுத்தியிருக்கும் முறையும் பாராட்டத் தக்கதேயாகும் . முதல் தொகுதி நான்கு வடிவங்களையும் , இரண்டாம் தொகுதி  இரு சொற்களாக ஐந்துவடிவங்களையும் , மூன்றாவது தொகுதி  நான்கு வடிவங்களையும் ,   நான்காவது தொகுதி  மூன்று வடிவங்களையும் கொண்டுள்ளன . வடிவங்கள் காட்டும் பொருள்நிலை சொல்நிலைக்கேற்ப பகுதிகளாக அவை அமைந்துள்ளன . முதலில் அவ்வடிவத் தொகுதிகளின் பொருள்நிலைக்கேற்ப அமைக்கிறேன்  :

      1)    கே ய     க க
      2)    க கன் ய     கா ய
      3)    க க க ய   
              1  2  3          3க ய   - முகய
      4)    த  க் க்

இவ்வடிவங்களின் அடிப்படையில் அவர்கள் சொல்லக் கருதிய கருத்து
     
       1)   = கேய  ககன்
       2)   =  ககன்ய  காய
       3)   =  முகய
       4)   =  தக்கன்

இவற்றுள்   ( அ )  (1)  கக என்பதன் இரண்டாவது வடிவம் ,  (3)  முகய என்பதன்  மூன்றாவது வடிவம்  ,  (4)  தக்க என்பதன் இரண்டு மற்றும் மூன்றாவது வடிவங்கள் ஆகியவை வடிவமைப்பால் மனிதக் கருத்துணர்த்தி உயர்திணை ஆண்பால் உணர்த்தி வந்தன . ( ஆ )  2 ஆம் தொகுதியின் இடமிருந்து  இரண்டாவது வடிவம்  மனித வடிவ  க  மற்றும் Y  வடிவ  ன் எழுத்து இணைந்து கூட்டுவடிவமாகி  கன் என்ற அசை உணர்த்தி  மனிதன் உட்கார்ந்திருப்பது போல மடிந்த நிலையில் உள்ளது . இத்தகைய  தவ என்ற  வடிவம் பொதிகை  குகை எழுத்தில்  மடிந்த நிலையில் வருகிறது . துறவிகள் இவ்வாறு எழுதுவதில் ஏதேனும்  மறைபொருள் இருக்கலாம் . ( இ ) 3 ஆம் தொகுதியில் 3 க வடிவங்கள் வந்து - க க க = முக என்றும் (  மு / மூ = மூன்று ) அதனுடன்  ய  என்ற  எழுத்து சேர  -  முகய என ஆனது . முகய் =  குகை . சிந்துவில்  நான்கு  ய ய ய ய  எழுதி =  நாய ( 2950 - மகாதேவன் ) = தலைவன் என்று எழுதுவர் . அவ்வாறே மூய என்றும் எழுதினர் .  (ஈ )  சிந்துவில் × என்பது  த  வடிவம் . இங்கு ,  பாறை எழுத்தில்  சற்று மாறி வந்தது . 
     பொருள்நிலையில்  கேயம் = இசை , ககம் =  வானம் .  ககன் =  வானவன் . ககனம் =  வானம் . காயம் = உடல் . ககன்ய  =  ககனத்திற்குரிய -  வானில் செல்லும் . வானசாரி =  ககன சஞ்சாரி  -  சித்தர்கள் .
     தங்கள் பூத உடலுடன் வானத்தில் சஞ்சரிக்கும்  சித்தர்கள் =  ககன  ( கமன ) சித்தர்கள் . குற்றாலக் குறவஞ்சி சித்தர்கள் வான்வழியே குற்றால நாதரைத் தொழ வருவதை  '  கமன சித்தர் வந்து வந்து காய சித்தி விளைப்பர்  '  என்று  பாடுகிறது . தமது பருவுடலுடன் வானத்தில் சித்தர்கள் சஞ்சரிப்பது  காய சித்தி எனப்படும் . இப்பாறை முகையில் ( குகையில் )  தங்கி இருந்தோர் ககன சாரிகள் எனப்படும் ககன சித்தர்கள் என்று மக்கள் நம்பியதை இவ்வெழுத்துகள் உணர்த்துகின்றன . இதன் பொருள் குறித்து நான் இதற்கு மேலே பேச விரும்பவில்லை . ஒரு வரலாற்று ஆய்வாளனது பணி அவன் கண்டு கூறும் பொருள் விளக்கப்  பொருத்தம்   ஒரு நிகழ்வில்  எத்தகைய பங்காற்றுகிறது என்பதுடன் முடிகிறது .  மேலாய்வு மொழியாய்வாளர்களுடையதேயாகும் .
     இம்முகையில் வாழ்ந்தவன் இசை வானவன்  (  கந்தர்வன் ) என்று கருதத் தக்கவன் ,   அவன்  ககனசாரி என்னும் கமன  சித்தனாவான் ,   அவன் இக்குகைக்குரியவன் ,  அவன் பெயர் தக்கன் என்பதாகும் . இத்துறவிகள்  அறிவர்  வழிச்  சித்தர்களாவர் . இப்பகுதிக்கு அண்மையிலுள்ள திரு அருண மலை எனப்படும் திருவண்ணாமலை சித்தர்கள்  உறையுமிடம் என்று இன்றும் பெயர் பெற்றுள்ளது . இந்த வீரபாண்டியைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில்  கீழ்வாலை ,  சாணூர் ,  பெருமுக்கல் ஆகிய இடங்களில்  தெளிவான சிந்து எழுத்து வடிவங்கள் கிடைத்துள்ளன . கீழ்வாலை -  வீரபாண்டி  -  பெருமுக்கல் என்ற  காலநிலைப்படி வரிசைப்படுத்தலாம் .   பெருமுக்கல்  கிமு   700  என்றால்  வீரபாண்டி எழுத்துகள் இன்னும் தொன்மையினவாய் கிமு 1000  என்ற கால அளவுக்குக் குறையாதத்  தொல்லெழுத்துகளாகலாம்

நன்றியுடன்
படித்து கூறிய ஐயா நாகை.பா.ஜீவா அவருடைய பதிவு
https://m.facebook.com/story.php?story_fbid=182083542871794&id=100032104492713

ஒரிசா பாலு ஐயா கடல் சார் ஆராய்ச்சியாளர்
செங்குட்டுவன் ஊடகவியலாளர்
திருக்கோவிலூர் நல்லதம்பி

திங்கள், 13 ஜனவரி, 2020

தமிழி எழுத்து பாறை ஓவியம்




திருக்கோவலூர் அருகே உள்ள வீரப்பாண்டி, தொல்லியல் தடயங்கள் நிறைந்தக் கிராமம்.

நேற்று, திருக்கோவலூர் வந்த ஆய்வாளர் திரு. ஒரிசா பாலு, ரிப்போடர் செங்குட்டுவன், பேராசிரியர் செல்லபெருமாள் ஆகியோர் வந்திருந்தார்கள்

ஊரின் புறத்தே பரந்து விரிந்து காணப்படுகிறது பெரிய ஏரி.

ஏரிக்குள் அங்கும் இங்கும் ஆக பெரியதும் சிறியதுமாக பாறைக் குன்றுகள் முளைத்துக் காணப்படுகின்றன.



குன்றின் மீது ஏறினோம். இடையில் அழகான குகைத் தளம். கீழ்வாலையில் பார்க்கிறோமே, அந்த மாதிரி!

அருகில் உள்ள ஓரு பாறை. வழவழப்பானது. சிரமப்பட்டு தான் ஏறினோம்.

இதில் தான் அந்தத் தொல்லியல் அடையாளங்கள் நிறைத்துள்ளன.

இன்னும் ஆவணப்படுத்தப் படாதவை என்றே கருதுகிறோம்.
விரைவில் ஆவணப்படுத்துவோம்.

வெள்ளி, 10 ஜனவரி, 2020

மீன் வளர்பும் நீர் நிலை ஆலை கழிவுகளால் மாசடைதல்



     சர்க்கரை ஆலை கழிவும் மீன்களுக்கு உணவாகச் சிறிய ஏரியிலே 4 &5 லாரி போடுகின்றார்கள் இதனால் இந்த ஆலை கழிவு ஏரியின் நீரை மாசு படுத்தும் மீனை உண்ணும் மக்களுக்கும் நோய்களும் வருடாவருடம் பயன் படுத்துவதால் நிலத்தடி நீரும் பதிக்கப்படும்




   கோழி பன்னை கழிவை மீன்களுக்கு உணவாகப் போடுகின்றார்கள் இதனை உண்ணும் மீன் மற்ற மீனை விடப் பல மடங்கு வேகமாக எடை அதிகரிக்கும் காரணம் கோழிகளுக்குக் கொடுக்கப்படும் ஆண்டி பயாடிக் மற்றும் ஆர்மோம் ஊசியும் கோழியின் மலம் வழியாக வருவதை மீன்களுக்குப் போடுவதுதான் வருடாவருடம் இதனைப் போட்டால் நிலத்தடி நீர்மட்டம் பாதித்து விவசாயம் அழியும்

சனி, 4 ஜனவரி, 2020

"கரு ஓட்டம்" (கருவோட்டம்)

📅📅📆📆🌧🌧
#தமிழர்களின் கண்டுபிடிப்புக்கள் 
இன்று தமிழர்கள் அறியாமல் அடையாளம் இழந்து கொண்டுள்ளனர்.

தினசரி காலண்டரில்  #கெர்போட்ட_நிவர்த்தி" என்று ஒரு குறிப்பு கண்டேன்  அப்படி என்றால் என்ன?  ஏதேனும் விசேட நாளா?

நீங்கள் சில நாட்காட்டியில் தேதி கிழிக்கும் போது #கெர்போட்டஆரம்பம் என்று இருப்பதை பார்தது இந்த கேள்வி கேட்டுள்ளீர்கள்.,

சிலர் காலண்டரின் பின்பக்கம் என்றைக்கெல்லால் தமிழகஅரசு விடுமுறை என்று  பாக்கும் போதெல்லாம்  *கெர்போட்ட நிவர்த்தி* என்று ஒன்று இருப்பதையும் கவனித்திருப்பீர்கள்.

இது ஏதும் விசேட தினமோ அல்லது மார்கழி மாத கோவில் திருநாளோ அல்ல

உண்மையில் தமிழர்கள் அடுத்த வருட மழைக்கணிப்பு முறை...

அதாவது "கரு ஓட்டம்" என்பதே கர்ப்ப ஓட்டம் என்று மாறி  கர்ப்போட்டம் என்றாகி இன்று காலண்டர்களில் கெர்ப்போட்டம் என்று காண்கிறது

நம்முடைய தமிழகத்தில் சூரியனின் சுழற்சியை மையமாக கொண்ட சூரியவழி மாதங்கள் பின்பற்ற படுகிறது

இது தவிர வானியல் நட்சத்திரங்களை இருபத்தேழு மண்டலங்களாகவும் பன்னிரு ராசி மண்டலங்களாகவும் பிரித்துள்ளனர்

அவ்வகையில் தனூர் மாதம் எனப்படும் மார்கழியில்

சூரியன்  தனூர் ராசி மண்டலத்தை கடக்கும் போது பூராட நட்சித்திரத்தை கடக்க பதினான்கு நாட்களை எடுத்து கொள்கிறது

இந்நாட்களில் கருமேகங்கள் தெற்கு நோக்கி நகருவதை கண்டுகொள்ளலாம்

இந்த பதினான்கு நாட்களும் கர்ப்போட்ட நாட்கள் ஆகும். அதாவது மழை கருக்கொள்ளும் நாள் அல்லது மேகம் சூலாகும் நாள். இதனை பெண்ணின் பத்துமாத கர்ப்பகாலத்துடன் ஒப்பிடுங்கள் மார்கழியில் கர்ப்பம் தரிக்கும் பெண் ஒருவர் ஒன்பது மாதம் கழித்து  புரட்டாசிக்கு பின் பிள்ளை பெறுவாள்.

அவ்வகையில் இந்த கர்போட்ட நாட்களில்  மழை முறையாக சூல் கொண்டால்
ஒன்பது மாதம் கழித்து அடுத்த ஆண்டில் ஐப்பசி கார்த்திகையில் மழைபொழிவு அளவும் முறையாக இருக்கும்

இந்த கர்போட்ட நாட்கள் தோராயமாக டிசம்பர் 28 முதல் ஐனவரி 11ஆந் தேதி வரை அமைகிறது

ஒரு எளிய விவசாயிக்கு தனூர் மாதம் பூராடம் நட்சத்திரமெல்லாம் தெரியாது இல்லையா??

எனவே

மார்கழி மாதம் அமாவாசையில் இருந்து அடுத்து வரும் பதினான்கு நாட்கள் "கர்போட்ட நாட்கள்" என்று நினைவில் வைத்து கொள்வார்கள்

இந்நாட்களில் லேசான தூறல் மெல்லிய சாரல் போன்ற மழை இருந்தால் மேகம் சரியாக கரு கட்டி இருக்கிறது என்று பொருள்.
எனவே வரும் அடுத்த ஆண்டு நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.

மாறாக கர்ப்போட்ட நாட்களில் கனமழை பெய்து சூறைக்காற்று வீசினாலோ கடும்வெயில் இருந்தாலோ மேகத்தின் கருக்கலைந்து விட்டது என்று பொருள்

எனவே மார்கழியில் கன மழை பெய்தால் அடுத்த ஆண்டு பருவமழை பொய்க்கும் என அர்த்தம்.

இன்றய வாழ்க்கையின் மாறுபட்ட சூழலியல் கேடுகளும் பருவநிலை மாற்றமும் மேகத்தின் கருக்கலைக்கும் வில்லன்களாக உருவெடுப்பதால் தான் ஒவ்வொரு வருடமும் மழையளவு குறைகிறது

இந்த கர்போட்ட நாட்களை கணித்து இன்றும் திருநெல்வேலி பகுதிகளில் விவசாயிகள் தங்கள் நிலங்களில் மானாவாரி( வானம் பார்த்த பயிர் ) பயிர்களை விதைக்கிறார்கள் விவசாயிகள்

நாம் இதுபற்றி எல்லாம் தெரியாமல் காலண்டரில்
கர்ப்போட்டம் என்று பார்த்ததும் ஏதோ பண்டிகை என்று நினைத்து தேதியை கிழிப்பது போல பாரம்பரியத்தை கிழிக்கிறோம்.

ஆங்கில கல்வியில் நம் பாரம்பரியத்தை இழந்து இன்று 
மழைவரும் நாட்களை தெரிந்துகொள்ள 
#வானிலை_அறிக்கைக்கு டீவியை பார்த்து கொண்டு அமர்ந்திருக்கிறோம்...

புதுமையின் மோகத்தில் எத்தனை பழமைகளை இழந்து கொண்டிருக்கிறோம் நாம்!!